ராகுல் காந்தியின் விருப்பம் நிறைவேறியது: பினராயி விஜயன் ஆவேசம்

கேரளாவில் சி.எம்.ஆர்.எல். நிறுவன ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயனின் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன், 'நீண்ட காலமாக அமலாக்கத்துறை என் வீட்டில் சோதனை நடத்த விரும்பியது. இந்த சோதனை ராகுல் காந்தி போன்ற சிலருக்கு பெரும் திருப்தியை அளிக்கும் என நான் உணர்கிறேன். பினராயி விஜயனின் வீட்டில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை? ஏன் அவர் கைது செய்யப்படவில்லை? என்பதே ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி. பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்துள்ளன. தங்கள் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் மீதான அமலாக்கத்துறையின் இந்தத் தலையீடு தொடர வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு. இவை எதுவும் எங்களை அழித்துவிடாது. இதை நாங்கள் ஒரு தொடக்கமாக மட்டுமே பார்க்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகள் எங்களை முற்றிலுமாக அழித்துவிடும் என்று யாரும் நினைக்கக் கூடாது' என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'உள்ளூர் மக்கள் மற்றும் கட்சித் தோழர்களின் உணர்வுகள் இங்கே வெளிப்படுத்தப்பட்டன. எதிரிகள் என்னைத் தாக்கத் தயாரான போதெல்லாம், கட்சியின் வலுவான ஆதரவுதான் எனக்குக் கிடைத்தது. அந்த ஆதரவில் எந்தக் குறைவும் இல்லை என்பதைத்தான் தோழர்கள் இன்று நிரூபித்துள்ளனர். இதுதான் நமது பலம். எதையும் எதிர்கொள்ள நாம் ஒன்றிணைவோம்' என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக, கேரள முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயனின் வீட்டில் சோதனை முடித்து புறப்பட்ட அமலாக்கத்துறை வாகனம் மீது சி.பி.எம். கட்சி தொண்டர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த திடீர் சோதனைகள் மற்றும் அதைத் தொடர்ந்த தாக்குதல்கள் கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகள் மத்தியில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான குரல்கள் வலுத்துள்ளன.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version