தமிழ்நாட்டில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மாதம் ரூ.5000 உரிமைத் தொகை வழங்க வேண்டும் என தறி ஆடையகத்தின் நிறுவனர் சி. சண்முகம் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விவசாயிகளுக்கு அடுத்தபடியாக பெரும்பான்மையான உழைக்கும் சமூகமாக நெசவாளர்கள் திகழ்வதாகவும், உழவர்கள் உணவை உற்பத்தி செய்து மக்களின் பசியைப் போக்குவது போல, நெசவாளர்கள் ஆடைகளைத் தயாரித்து மக்களின் மானத்தைக் காப்பவர்கள் என்றும் குறிப்பிட்டார். அவர்களின் நலன்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் கடமை எனச் சுட்டிக்காட்டிய அவர், நெசவுத் தொழிலாளர்களின் நலன்களைக் காப்பதற்காக பத்து முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்.
நெசவுத் துறை நலிவடைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய சி. சண்முகம், அதை மீட்டெடுக்கப் புதிய திட்டங்களும் சீர்திருத்தங்களும் அவசியம் என்றார். வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதைப் போல, நெசவுத்துறைக்கும் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், நெசவாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நெசவாளர்களுக்கு மாதம் ரூ.5000 உரிமைத் தொகையாக வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பட்டு நெசவாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு 30% கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், ஆண்டுக்கு 10% கூலி உயர்வு வழங்குவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பட்டுப்புடவைகள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என சி. சண்முகம் வலியுறுத்தினார். நெசவுத் தொழிலுக்குத் தேவையான நூல், சாயம் போன்ற மூலப்பொருட்களுக்கு 50% மானியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
கைத்தறி வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தின் அளவை 500 யூனிட்டுகளாகவும், விசைத்தறி வீடுகளுக்கான இலவச மின்சாரத்தின் அளவை 1500 யூனிட்டுகளாகவும் அதிகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும், 12 விசைத்தறிகள் வரை உள்ள சிறிய விசைத்தறிக் கூடங்களுக்கு சூரிய ஒளி மின்னுற்பத்திக் கட்டமைப்பை ஏற்படுத்த 75% மானியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஆடை வடிவமைப்பு மற்றும் துணி தொழில்நுட்பம் போன்ற படிப்புகளில் நெசவாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தனி இட ஒதுக்கீடும், படிக்கும்போதே உதவித் தொகையும் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கைத்தறி துணிகளை விற்பனை செய்ய அனைத்து நகரங்களிலும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஆன்லைனில் விற்பனை செய்வதற்காகத் தனி பிராண்ட் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 'தறி' என்ற தங்களின் பிராண்டை அரசு பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களையும், முதல்-அமைச்சரையும் நேரில் சந்தித்து வழங்க இருப்பதாகவும், தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் சி. சண்முகம் கேட்டுக்கொண்டார்.

