துணி துவைத்தும் துர்நாற்றமா? வாஷிங் மெஷினை இப்படி சுத்தம் செய்யுங்கள்!

வாஷிங் மெஷினின் ரப்பர் டோர் சீலை சுத்தம் செய்யும் காட்சி

வாஷிங் மெஷினில் துணி துவைத்த பிறகும் அதில் புத்துணர்ச்சி இல்லை என்றால், நீங்கள் சோப்புத் தூளையோ அல்லது திரவத்தையோ மாற்றுவதற்குப் பதிலாக உங்கள் வாஷிங் மெஷினையே சுத்தம் செய்ய வேண்டும். காலப்போக்கில், டிடர்ஜென்ட் துகள்கள், ஃபேப்ரிக் சாஃப்ட்னர், துணிகளில் உள்ள அழுக்கு, உடல் எண்ணெய் மற்றும் ஈரப்பதம் ஆகியவை மெஷினுக்குள் தேங்கி, பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வளர ஏற்ற சூழலை உருவாக்குகின்றன. இதன் விளைவாகவே துணிகளில் விரும்பத்தகாத துர்நாற்றம் ஏற்படுகிறது.

இந்தச் சிக்கலைத் தீர்க்க, வாஷிங் மெஷினைச் சுத்தமாக வைத்திருக்க சில எளிய பராமரிப்பு முறைகள் உள்ளன. இவை உங்கள் துணிகளை மேலும் பளிச்சென்றும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.

மாதத்திற்கு ஒருமுறை, வாஷிங் மெஷினை வெறும் சூடான நீரில் 'எம்டி வாஷ்' செய்வது சிறந்த சுத்தம் செய்யும் முறையாகும். துணிகள் எதுவும் இல்லாமல் வெறும் சூடான நீரை மட்டும் கொண்டு ஒருமுறை மெஷினை இயக்குவது, மெஷினின் டிரம் மற்றும் குழாய்களில் தேங்கியுள்ள சோப்புக் கழிவுகள், கொழுப்பு மற்றும் பாக்டீரியாக்களைக் கரைத்து வெளியேற்றும். உங்கள் மெஷினில் 'டிரம் கிளீன்' என்ற பிரத்யேக வசதி இருந்தால், அதைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முன்பக்கக் கதவு கொண்ட வாஷிங் மெஷின்களில் உள்ள ரப்பர் டோர் சீல்களில் துணி நூல்கள், முடிகள், சோப்புத் துகள்கள் மற்றும் ஈரப்பதம் எளிதில் தேங்கிவிடும். இது கவனிக்கப்படாவிட்டால், பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, அந்த ரப்பர் மடிப்புகளை மெதுவாக இழுத்து, சோப்பு நீர் அல்லது கிளீனிங் சொல்யூஷன் நனைத்த மென்மையான துணியால் துடைக்க வேண்டும். துடைத்த பிறகு, ஈரப்பதம் தங்காதவாறு நன்கு உலர்த்துவது துர்நாற்றத்தைத் தடுக்க உதவும்.

பெரும்பாலானோர் சோப்புத் தூள் மற்றும் கம்ஃபோர்ட் ஊற்றும் டிராயர் பகுதியை சுத்தம் செய்வதில்லை. பெரும்பாலான மெஷின்களில் இந்த டிராயரைக் கழற்றி சுத்தம் செய்ய முடியும். அதை வெதுவெதுப்பான நீரில் கழுவி, கறை படிந்த பகுதிகளை ஒரு சிறிய பிரஷ் கொண்டு தேய்த்துச் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் சோப்பு தங்குதடையின்றி மெஷினுக்குள் செல்வதோடு, துர்நாற்றமும் கட்டுப்படுத்தப்படும்.

துவைத்த உடனேயே வாஷிங் மெஷின் கதவை மூடி வைத்தால், உள்ளே இருக்கும் ஈரப்பதம் வெளியேற முடியாமல் பூஞ்சை மற்றும் ஈர நாற்றம் உருவாகும். எனவே, ஒவ்வொரு முறை துவைத்த பிறகும், மெஷினின் கதவையும் சோப்புப் போடும் டிராயரையும் சில மணிநேரங்களுக்குத் திறந்து வைப்பது நல்லது. இது காற்றோட்டத்தை அதிகரித்து, துர்நாற்றம் வராமல் தடுக்கும்.

இந்த எளிய பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் வாஷிங் மெஷினைச் சுத்தமாக வைத்திருக்கலாம். இதன் மூலம் துணிகளில் துவைத்தும் வரும் துர்நாற்றத்தைப் போக்கி, எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடியும்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version