மதுப்பழக்கம் தனிமனித ஆரோக்கியத்தையும், குடும்ப நிம்மதியையும் சீர்குலைக்கும் ஒரு கொடிய பழக்கம் என்பதை உணர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி மீனவ கிராம மக்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர். இந்த கிராமத்தில் இளைஞர்களை மதுவின் பிடியில் இருந்து காப்பாற்றி, ஊரின் அமைதியையும், பொது சுகாதாரத்தையும் பேணிக்காக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விழுந்தமாவடி கிராமத்தில், ஊர் பஞ்சாயத்துகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, 'மதுவை ஒழிப்போம், மக்களை காப்போம்' என்ற வாசகத்துடன் ஒரு அறிவிப்புப் பலகையை வைத்துள்ளனர். இந்த அறிவிப்பின்படி, வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி, 2026 முதல், கிராமத்தில் திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நிரூபித்தால், அவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ பிரச்சனைகளில் ஈடுபட்டால், அவர்களுக்கும் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஊரின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன.
'இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும். மதுவை தவிர்போம், நம் எதிர்கால வாழ்கையையும், நம் சமூகத்தையும் பாதுகாப்போம்' என்ற வாசகங்கள் மூலம் மதுவின் தீமைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
'மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!' என்ற முழக்கத்துடன், விழுந்தமாவடி கிராம மக்கள் எடுத்துள்ள இந்த முயற்சி, தமிழக அரசு போதைப்பொருளுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த கிராம மக்களின் முன்மாதிரியான முடிவு, மற்ற கிராமங்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுப்பழக்கம் கல்லீரல் பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற தீவிர நோய்களுக்கும், குடும்பத் தகராறுகள், வீண் கடன்கள், சாலை விபத்துகள் போன்ற சமூகப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது. இந்த கசப்பான உண்மைகளை உணர்ந்தே விழுந்தமாவடி கிராம மக்கள் இந்த கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளனர். இது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதோடு, கிராமத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

