இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்ப தனக்கு பெரிய அளவில் பணம் பேரம் பேசப்பட்டதாக ஜெர்மன் மாடல் லிஸ்லாஸ் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஒரு சிறிய 'லைக்' செய்ததால் உருவான சர்ச்சை, தற்போது கோலியின் நற்பெயருக்கு திட்டமிட்டு களங்கம் விளைவிக்கும் சதியாக மாறியுள்ளதன் பின்னணி என்ன என்பது விரிவாகப் பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் உலக அளவிலான ரசிகர்களைக் கொண்ட விராட் கோலி, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து ஜெர்மன் மற்றும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மாடலும் பாடகியுமான லிஸ்லாஸின் பழைய பதிவு ஒன்றுக்கு 'லைக்' செய்யப்பட்டதாக ஸ்கிரீன்ஷாட்டுகள் வெளியாகி வைரலாகின. கோலி அவரை பின்தொடராத நிலையில், இந்த லைக் எப்படி விழுந்தது என நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டனர். கடந்த 2025ம் ஆண்டு இதேபோல் ஒரு சர்ச்சை எழுந்தபோது, அது இன்ஸ்டாகிராம் தொழில்நுட்பக் கோளாறு என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து பேட்டியளித்த மாடல் லிஸ்லாஸ், இந்த விவகாரம் வைரலான பிறகு சில பத்திரிகையாளர்கள் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், கோலி செய்யாத ஒரு விஷயத்தை செய்ததாகக் கூறி அவர் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் முன்வைக்க தனக்கு பணம் தருவதாக பேரம் பேசியதாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால், விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும் கோலியின் நற்பெயரைக் கெடுக்க தான் ஒருபோதும் விரும்பவில்லை என திட்டவட்டமாக அந்த பேரத்தை மறுத்துவிட்டதாக அவர் கூறினார். தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்களில் கோலியும் ஒருவர் என்றும், சமூக வலைதளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்படுவது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
2026 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் கோலி, முதல் 11 போட்டிகளில் 379 ரன்கள் குவித்து அபாரமான ஃபார்மில் இருந்தார். ஆனால், சமீபத்திய 2 போட்டிகளில் தொடர்ச்சியாக ரன் ஏதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிரமாக உள்ள நிலையில், அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. கோலி மீதான இந்த அவதூறு சதி மற்றும் பேட்டிங் சறுக்கல் பெங்களூரு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
