வில்லுப்பாட்டு கலை மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள 'வில்லுப்பாட்டு' மாதவி, தற்போது 'வேட்ட சாமி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார். இந்த அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
7 Miles Per Seconds Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் உருவாகியுள்ள 'வேட்ட சாமி' திரைப்படம், வீரத்தையும் தெய்வ நம்பிக்கையையும் மையமாகக் கொண்ட கதையை கொண்டுள்ளது. இந்தப் படத்தை 'பம்பர்' திரைப்படத்தை இயக்கிய எம்.செல்வகுமார் இயக்கியுள்ளார். அருள்நிதி மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், தமிழ், விஜி சந்திரசேகர், 'ஆடுகளம்' நரேன், அர்ஜெய், OAK சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி, நந்தினி போன்ற பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்தின் படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சண்டைக் காட்சிகளை சிறுத்தை கணேஷ் வடிவமைத்துள்ளார்.
'வேட்ட சாமி' திரைப்படத்தில் வில்லுப்பாட்டு மாதவி பாடகியாக அறிமுகமாவதை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 'நம்முடைய மண் சார்ந்த இசையில் இசையமைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வில்லுப்பாட்டு கலைஞர் மாதவி, தனது தனித்துவமான தமிழ் உச்சரிப்பு மற்றும் பாடும் திறமையால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் அவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தென் தமிழ்நாட்டின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், மாதவி பாடுகிறார் என்று அழைத்தால், ஆயிரக்கணக்கானோர் கூடி திருவிழாவைக் களைகட்டுவார்கள்.
இதுவரை நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடியுள்ள மாதவி, தனது வில்லிசை கலைக்காக பல விருதுகளை வென்றுள்ளார். நாட்டுப்புற இசை மற்றும் பாரம்பரியக் கலையை இன்றைய 2கே கிட்ஸ் தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இன்றைய தலைமுறையினருக்கு வில்லுப்பாட்டு கலையின் அடையாளமாக திகழும் மாதவி, தற்போது சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி இருப்பது அவரது கலைப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. அவரது திரையுலக பிரவேசம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

