முதலமைச்சராக பதவியேற்ற விஜய் – பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க வாழ்த்து

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், இன்று தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராகப் பதவியேற்றார். முதல் சட்டமன்ற தேர்தலிலேயே 108 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இன்று முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் அனுர குமர திசநாயக்க ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தமிழ் வாழ்த்துச் செய்தியில்,

“தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு, தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் அனுர குமர திசநாயக்க வெளியிட்டுள்ள வாழ்த்துப் பகுதியில்,

“தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாச்சாரம், தொழில்முனைவு மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் மக்கள் இடையிலான ஆழமான பிணைப்புகள் ஆகியவற்றின் மூலம் ஒன்றிணைந்துள்ளன.

இலங்கையும், இந்தியாவும் தொடர்ந்து மிக நெருக்கமான உறவுகளையும், வலுவான கூட்டாண்மையையும் வளர்த்து வருவதால், நமது எதிர்காலம் அளப்பரிய பொருளாதார நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்தியா–இலங்கை இடையிலான வலுவான கூட்டாண்மையின் கட்டமைப்பிற்குள் நின்று, மிகுந்த செழுமையையும் முன்னேற்றத்தையும் அடைவதை இலக்காகக் கொண்டு, இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிட்ட வேண்டுமென, இலங்கை மக்கள் சார்பாக நானும் இணைந்து வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version