விஜய் பிரதமரை சந்திக்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என தெரிவித்தார். இந்தியாவின் நலத்திட்டங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது பெருமைக்குரியது என்றும், இத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், அரசின் கவனத்திற்கு வராத லட்சக்கணக்கான மக்கள் மீது கவனம் செலுத்தி, அவர்களுக்கென புதிய நலத்திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சிலர் சொல்வது போல, 'கம்யூனிஸ்ட்கள் ஆளும் அரசுக்கு குடைச்சல் தருவார்கள், நிம்மதியாக விட மாட்டார்கள்' என்ற எண்ணத்தை நிராகரிப்பதாக மு.வீரபாண்டியன் கூறினார். கொசு மருந்து அடிக்கும் தொழிலாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவற்றை முன்னெடுத்து செயல்படுத்துவதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

குதிரை பேரமோ, ஆடு பேரமோ, எந்த விதமான பேரங்களிலும் இதுவரை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஈடுபட்டதில்லை என்றும், தங்களுக்கு பேரங்கள் தெரியாது, கோரிக்கைகள் மட்டுமே தெரியும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக டெல்லிக்கு சென்று, மத்திய அரசிடம் கிடப்பில் உள்ள தமிழகத்திற்கான நிதியை கேட்டு பெற வேண்டும் என்றும், மத்திய அரசும் தங்குதடையின்றி அந்த நிதியை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வன்கொடுமை சட்டத்தை கடுமையாக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும், மாநிலத்தில் போதை பழக்கம் பரவலாக பரவி வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். கல்வி ஒன்றின் மூலமாக மட்டுமே மனித மனங்களில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதால், போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை கல்வி இயக்கத்தின் மூலம் தமிழக அரசு தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கேட்டுக்கொண்டார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version