முதல்வர் விஜய், அழுத்தம் கொடுத்தால் பணிந்து போகும் எடப்பாடி பழனிசாமி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்திற்கு எதிரான தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு செயல்படுத்த முயற்சிப்பதை கண்டித்து, சென்னையில் இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர், பல முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், "திமுகவின் புதிய நண்பராக பாஜக நெருங்கி வருகிறது. திமுகவின் உண்மையான எண்ணம் என்ன என்பது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாஜகவுடன் திமுக நெருங்குகிறதா இல்லையா என்பதை மு.க.ஸ்டாலின் தான் தெளிவுபடுத்த வேண்டும். முதலில் ஓ.பன்னீர்செல்வம் ஏமாந்தார், அடுத்ததாக எடப்பாடி பழனிசாமி ஏமாந்தார். அடுத்ததாக யார் ஏமாறப் போகிறார்கள் என்பதை நீங்களே அறிவீர்கள்" என்று கூறினார்.
மேலும், முதல்வர் விஜய் குறித்து பேசிய அவர், "முதல்வர் விஜய் என்ன எடப்பாடி பழனிசாமியா? அழுத்தம் கொடுத்தால் பணிந்து போக? யாராவது ஆதரவாக ஓட்டு போட்டால் அவர்கள் தான் எட்டப்பர். அன்புமணி ராமதாஸும், தான் ஒரு எட்டப்பர் என்று ஒப்புக்கொண்டுள்ளார். அதிமுக, பாஜக, பாமகவை தவிர வேறு யார் எட்டப்பர்களாக இருக்கிறார்கள் என்பதை விரைவில் அறிவிப்போம். அன்புமணி ராமதாஸைப் பொறுத்தவரை, பாஜக கொடுக்கும் பணிகளைச் செய்துகொண்டு இருக்கிறார்" என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கள், தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, முதல்வர் விஜய்யை எடப்பாடி பழனிசாமியுடன் ஒப்பிட்டு மாணிக்கம் தாகூர் பேசியது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா குறித்த காங்கிரஸின் எதிர்ப்பையும் இந்த அமைதிப் பேரணி வெளிப்படுத்தியுள்ளது.

