மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் இன்று ஒரு முக்கிய கடிதம் எழுதியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இந்திய மீனவர்கள், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்த கடிதம் அமைந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மத்திய அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரவே தாம் கடிதம் எழுதுவதாக முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை கடல் எல்லையை (IMBL) தாண்டி நெடுந்தீவு கரையை ஒட்டி தரைதட்டி நின்ற விசைப்படகையும், அதில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்ததாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது, மீனவ சமூகத்தினரிடையே பெரும் மனவேதனையை ஏற்படுத்தி வருவதாகவும், இது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்து, பாக் ஜலசந்தியை நம்பி வாழும் மீனவர்களின் மத்தியில் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உரிய தூதரக வழிமுறைகள் மூலம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்து, பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அமைச்சரை முதல்வர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இப்பிரச்சினை குறித்து கூட்டு செயல்பாட்டுக் குழு மூலமாக இருதரப்பு பேச்சுவார்த்தையை விரைவாக நடத்துவது மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான தீர்வாக அமையும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் தனிப்பட்ட தலையீட்டையும், விரைவான பதிலையும் எதிர்பார்ப்பதாக முதல்வர் ஜோசப் விஜய் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
