தமிழகத்தில் அரசுப் பணி வழங்கிய விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். "கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போலத்தான் விஜய் அரசுப்பணி வழங்கியுள்ளார்" என்று அவர் சாடியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அரசு வேலை வாய்ப்பை வழங்கி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் வாய்ப்புகளை ஏன் பறிக்க வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தில், பாதிக்கப்பட்ட 32 குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கலாமே? இது கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை போன்றது" என்று விமர்சித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "கரூரில் முதலமைச்சர் விஜயின் நேற்றைய பேச்சு வழக்கமான ஸ்கிரிப்ட் தான், அதில் புதுமையாக எதுவும் இல்லை. கரூர் இடைத்தேர்தலை மனதில் கொண்டே விஜய் பேசியிருக்கிறார். கரூரில் முதலமைச்சர் என்பதை மறந்து அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளார். மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றியது உண்டா?" என்று கேள்வி எழுப்பினார்.
முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை முதலமைச்சர் விஜய் பேசுவதில்லை என்றும், ஊழல்வாதிகளை அருகில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்று பேசுவது நகைப்புக்குரியது என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார். முதலமைச்சர் விஜய் இன்னும் சினிமா சூட்டிங் போலவே நடந்துகொள்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

