தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக சிலர் திட்டமிட்டு சாதிய வெறுப்பு அரசியலை பரப்பி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து எங்களுக்கு கவலை உள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்தியா கூட்டணியின் நிலைப்பாட்டுடன் விசிக பயணிக்கும்" என்று தெரிவித்தார்.
தவெக கூட்டணியில் பாமக இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "யூகமான கேள்விகளுக்கு நானும் யூகமாக பதிலளிக்க முடியாது. சாதிய கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி கூட கிடையாது என்பதே விசிகவின் நிலைப்பாடு. தேர்தலுக்கு முந்தைய எங்களின் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தவெகவுடனான எங்களின் உறவு நெருக்கமாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.
மேலும், "தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக சிலர் திட்டமிட்டு சாதிய வெறுப்பு அரசியலை பரப்பி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது" என்றும் அவர் கூறினார்.
பத்திரிக்கையாளர் விஜயனை போலீசார் நள்ளிரவில் அலைக்கழித்து உளவியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய திருமாவளவன், "இந்த போக்கு ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. ஊடகவியலாளர்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளார்கள். இந்த அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும்" என வலியுறுத்தினார்.
சேலத்தில் அம்பேத்கர் சிலையை திறக்க 5 ஆண்டுகளாக முடியவில்லை என்றும், கடந்த ஆட்சியின் போது அம்பேத்கர் சிலையை திறக்க முயன்றபோது அனுமதி பெறுவது மிகவும் கடினமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். "தமிழகத்தில் மட்டும் தான் அம்பேத்கர் சிலையை திறக்க அனுமதி பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. தவெக அரசு அம்பேத்கர் சிலைகளை திறக்க முன் வர வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
