வியட்நாம் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு – முதல்வர் இரங்கல்

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

வியட்நாமின் பூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுடன் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 15 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழர்கள் 17 பேர் உட்பட மொத்தம் 32 சுற்றுலாப் பயணிகள் அந்த படகில் பயணித்துள்ளனர். கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர். சுற்றுலாப் பயணிகள் தவிர, படகின் 4 பணியாளர்களும் பயணித்திருந்தனர். உயிரிழந்த 15 பேரும் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த 10 தமிழர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பழனியைச் சேர்ந்த முருக பிரபு (44), தருமபுரியைச் சேர்ந்த செந்தில் குமார் (45), சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், திருச்சி அன்பு நகரைச் சேர்ந்த அழகுராஜன், திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, பீமநகர் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா, வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வினய்குமார் (48), ரவி சங்கர், சந்தோஷ் குமார், மற்றும் பாபு ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, பழனியைச் சேர்ந்த முருகபிரபு (44) மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் ஒரு செல்போன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர்களாகப் பணியாற்றி வந்தனர். அவர்களின் சிறப்பான வணிகச் செயல்பாட்டிற்காக, அந்நிறுவனம் இவர்களை வியட்நாம் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது. இதேபோல், தருமபுரி மாவட்ட லாவா மொபைல் ஏஜென்சி, ஆர்.ஓ சிஸ்டம் ஏஜென்சி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வந்த தொழிலதிபர் செந்தில்குமார் (45) உயிரிழந்தார். இவருக்கு மனைவி பூவிழி (40) மற்றும் மகள் லோகஶ்ரீ (7) உள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், ஹை க்யூ என்டர்பிரைசஸ் (பி) லிட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் ஓப்போ, ஐ போன், லாவா போன்ற செல்போன்களின் விநியோகஸ்தராக அறியப்பட்டவர். இவருக்கு கார்த்திக், ஹரிணி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மேலும், திருச்சியைச் சேர்ந்த அழகுராஜன், பாலாஜி, ஷேக் அப்துல்லா ஆகிய மூவரும் லாவா நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் என்றும், அந்நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இன்பச் சுற்றுலாவுக்காக வியட்நாம் சென்றிருந்ததும் தெரியவந்துள்ளது.

வேலூரைச் சேர்ந்த வினய்குமார் (48) நகைக்கடை நடத்தி வந்ததுடன், பிரபல செல்போன் நிறுவனத்தின் வேலூர் மாவட்ட டிஸ்ட்ரிபியூட்டராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய், விபத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தனது X தளத்தில் பதிவிட்ட முதல்வர் விஜய், 'வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்' என தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “வியட்நாம் விபத்தில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்த தகவலறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். இந்திய தூதரகம், துணை தூதரகம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யத் தயாராக உள்ளது. நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version