தமிழக முதல்வர் விஜய் அவர்களின் சொந்தத் தொகுதியான சென்னையில், பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"சென்னை பெரம்பூரில், ஒரு இளம்பெண் தனது முன்னாள் ஆண் நண்பர் மற்றும் அவருடன் சேர்ந்த மேலும் நான்கு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இது ஒருபுறமிருக்க, கடந்த மாதமும் இதே பெரம்பூர் பகுதியில் மற்றொரு இளம்பெண்ணை அவரது முன்னாள் ஆண் நண்பரே வீடு புகுந்து தாக்கியதாக செய்திகள் வெளியாகின. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
மேடைகளில் பெண்களை 'அக்கா', 'தங்கை', 'தோழி' என உணர்வுப்பூர்வமாகப் பேசும் முதல்வர் விஜய் அவர்களின் சொந்தத் தொகுதியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவும்போது, ஒட்டுமொத்த தமிழகப் பெண்களுக்கும் முதல்வர் எப்படிப் பாதுகாப்பு வழங்கப் போகிறார் என்ற நியாயமான கேள்வி ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் எழுந்துள்ளது. இது ஒரு தீவிரமான கவலைக்குரிய விஷயமாகும்.
'சீரும் சிங்கங்களாய் ஏதோ பெரிய மாற்றம் கொண்டு வரப்போகிறோம்' என்ற பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட 'சிங்கப் பெண் அதிரடிப் படை' தற்போது சோர்வடைந்து, வழக்கமான மகளிர் காவல் நிலையங்களைப் போலவே செயல்படுவதற்கு, எதற்குத் தனியாக ஒரு சிறப்புப் படை அமைக்கப்பட்டது? என்ற கேள்வியும் எழுகிறது.
எனவே, பெண்களைக் காதல் என்ற பெயரில் அத்துமீறும் ஆண்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில், இந்த 'சிங்கப் பெண் படையை' உடனடியாக முடுக்கிவிட்டு, இரும்புக்கரம் கொண்டு கடுமையாகச் செயல்பட வேண்டும் என தமிழக அரசை நான் வலியுறுத்துகிறேன். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் தலையாய கடமையாகும்" என்று வானதி சீனிவாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
