சென்னை உணவு விநியோக ஊழியராக பணிபுரியும் சேத்தன் சீனு, முதியோர் இல்லத்தில் சேவை செய்யும் ஆஷ்னா சாவேரியுடன் நட்பு கொள்கிறார். இந்நிலையில், ஒரு அரசியல்வாதி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரது உடலில் திருக்குறள் வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
தொடர்ந்து இதே பாணியில் மேலும் சில கொலைகள் நடக்கின்றன. இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி பிரேம்குமார், கொலைகளுக்குப் பின்னால் ஒரு பெரிய காரணம் இருப்பதை கண்டறிகிறார். இறுதியில் உண்மையான கொலையாளி யார், கொலைகளின் நோக்கம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சேத்தன் சீனு, தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக, ஆக்ஷன் காட்சிகளில் அவர் கவனம் ஈர்க்கிறார். நாயகி ஆஷ்னா சாவேரி வழக்கமான பாத்திரத்தில் தோன்றினாலும், இறுதியில் அவரது கதாபாத்திரம் எதிர்பாராத திருப்பத்தை அளிக்கிறது. காவல்துறை அதிகாரியாக பிரேம்குமார், மனோபாலா, சாய் தீனா, மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்குனர் சங்கர் சாரதி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டத்தின் மீதான நம்பிக்கை, குற்றவாளிகளுக்கான தண்டனை ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார். பணம், அதிகாரத்தால் குற்றவாளிகள் தப்பிப்பது போன்ற யதார்த்தமான விஷயங்களைப் பேச முயற்சித்திருக்கிறார். சிறிய முதலீட்டில் சமூகக் கருத்துடன் ஒரு திரில்லர் படத்தை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. திரைக்கதையில் இன்னும் சுவாரசியம் கூட்டியிருந்தால் ரசனைக்குரியதாக இருந்திருக்கும். ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா காட்சிகளை இயல்பாக பதிவு செய்துள்ளார். அஸ்வத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு பலம் சேர்க்கின்றன.