இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை உடனடியாக இந்திய சீனியர் அணியில் சேர்க்க வேண்டும் என பிசிசிஐ-க்கு வலியுறுத்தியுள்ளார். வீரரின் வயதை விட அவரது அதிரடி ஆட்டமே முக்கியம் என்றும், அவரை டி20 கிரிக்கெட் மூலம் இந்திய அணிக்கு அறிமுகப்படுத்துவதே சிறந்தது என்றும் சாஸ்திரி கூறியுள்ளார்.
ரவி சாஸ்திரி தனது பேட்டியில், "வைபவ் சூர்யவன்ஷியின் வயது 14, 15 அல்லது 16 எதுவாக இருந்தாலும் எனக்கு அது முக்கியமல்ல. தன்னைவிட இரு மடங்கு வயது அதிகமான பந்துவீச்சாளர்களை அவர் எதிர்கொள்ளும் விதமும், அவரது அசாத்தியமான பேட்டிங் திறமையும் பிரமிக்க வைக்கிறது. அவருக்கு அச்சம் என்பதே கிடையாது. எனவே, வரும் ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும். ஒரு இளம் வீரரை ஊக்குவிக்க டி20 கிரிக்கெட் மிகச்சிறந்த தளம்" என்று தெரிவித்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி காட்டி வரும் அதிரடி ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 440 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி 40 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 236.56 ஆகவும் உள்ளது. குறிப்பாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெறும் 37 பந்துகளில் சதம் அடித்தது கிரிக்கெட் ரசிகர்களால் இன்றும் பேசப்படுகிறது. இந்த சீசனில் அவர் 40 சிக்ஸர்களையும் பறக்கவிட்டுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் சாதனைகள் இதோடு நிற்கவில்லை. 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்தார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். பீகார் மாநிலத்திற்காக விளையாடி மிகக் குறைந்த வயதில் லிஸ்ட் ஏ போட்டிகளில் சதம் அடித்த உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். தற்போது, ஜூன் 9 முதல் 21 வரை இலங்கையில் நடைபெறும் இந்தியா ஏ, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரில் வைபவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொடர் முடிந்த பிறகு, ஜூன் இறுதியில் நடைபெறும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய சீனியர் அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.