இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டுகால சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தனது 16-வது வயதில் இந்திய அணியில் அறிமுகமானார். இந்திய அணிக்காக விளையாடிய மிக இளம் வீரர் என்ற அவரது சாதனை 36 ஆண்டுகளாக நீடித்து வந்தது. தற்போது, பீகாரைச் சேர்ந்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இந்த சாதனையைத் தகர்த்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 16 போட்டிகளில் 776 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை வென்றார். மேலும், ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர்களை அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்தார். இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பி, சூப்பர் ஸ்டிரைக்கர் மற்றும் தொடரின் மதிப்புமிக்க வீரர் (எம்விபி) என மொத்தம் 5 விருதுகளை வென்று அசத்தினார்.
இந்த சீசனுக்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்திறன் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், ஜஸ்பிரித் பும்ரா, பாட் கம்மின்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொண்டு அவர் பதிலடி கொடுத்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சதம் அடித்ததுடன், பிளே-ஆஃப் போட்டிகளில் இரண்டு முறை என மொத்தம் மூன்று முறை 90 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 175 ரன்கள் குவித்திருந்தார்.
வைபவ் சூர்யவன்ஷியின் தேர்வு குறித்து தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில், 'அவரது அபார ஆட்டத்திறனை எங்களால் புறக்கணிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய அழுத்தங்கள் நிறைந்த போட்டிகளில் ஒரு 15 வயது சிறுவன் காட்டியுள்ள முதிர்ச்சி வியக்க வைக்கிறது. அவர் ஒரு ஆட்டத்தையே மாற்றக்கூடிய வீரர். அவர் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது' என்று தெரிவித்தார். அயர்லாந்து தொடருக்கு முன்னதாக, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி விளையாட உள்ளார்.