இந்திய டி20 அணியில் எளிதாக இடம் பிடித்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்று அவரது பயிற்சியாளர் மனிஷ் ஓஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், சிவப்பு பந்து கிரிக்கெட்டிலும் தனது திறமையை நிரூபிக்க சூர்யவன்ஷிக்கு அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தற்போது துலீப் டிராபி 2026 தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு ரெட்-பால் போட்டிகளில் விளையாடும் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. வெறும் 15 வயதாகும் இந்த இளம் இடதுகை பேட்ஸ்மேன், ஐபிஎல் தொடரின் மூலம் குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி கண்டு, கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார்.
ஆனால், இதுவரை அவர் விளையாடியுள்ள ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில், 12 இன்னிங்ஸ்களில் வெறும் 207 ரன்களை மட்டுமே 17.25 சராசரியுடன் எடுத்துள்ளார். இருப்பினும், ஆஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்டோருக்கான யூத் டெஸ்ட் போட்டிகளில் அவர் இரண்டு சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வைபவ் சூர்யவன்ஷி செய்ய வேண்டிய மிகப்பெரிய மாற்றம் மனரீதியானது என பயிற்சியாளர் மனிஷ் ஓஜா தெரிவித்துள்ளார். வெள்ளை பந்து கிரிக்கெட்டில், சூர்யவன்ஷி ஒவ்வொரு பந்தையும் அதிரடியாக அடிக்க முயற்சிக்கிறார். ஆனால், புதிய சிவப்பு பந்துக்கு எதிராக இந்த அணுகுமுறை உதவாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சரியான பந்துகளை பொறுமையாகக் காத்திருந்து, விக்கெட் இழக்கும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இன்னிங்ஸை எவ்வாறு கட்டமைப்பது என்பதை அவர் கற்றுக்கொள்ள வேண்டும். அவரால் 300 பந்துகளை எதிர்கொண்டு விளையாட முடியும் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன்னதாக அவர் இந்த அனுபவத்தைப் பெற வேண்டியது அவசியம் என்று ஓஜா வலியுறுத்தியுள்ளார்.
அவருக்கு இப்போது 15 வயது என்பதால், அவர் முதிர்ச்சியடைய இன்னும் கால அவகாசம் தேவை. இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பது எளிதான காரியம் அல்ல. இன்றைய காலகட்டத்தில் வீரர்கள் அதிக அளவில் டி20 போட்டிகளில் விளையாடுகிறார்கள். ஆனால், துலீப் மற்றும் ரஞ்சிக் கோப்பை போன்ற தொடர்களில் ஒரு சீசனுக்கு 7 முதல் 10 போட்டிகள் மட்டுமே ஒரு வீரருக்கு கிடைக்கக்கூடும்.
அந்தப் போட்டிகளில் தொடர்ந்து சதங்களும், இரட்டைச் சதங்களும் விளாசினால் மட்டுமே தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்க்க முடியும். அதையும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் செய்ய வேண்டும். இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதற்கு அவருக்கும், அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பொறுமை தேவை என்று ஓஜா விளக்கினார்.
இருப்பினும், சூர்யவன்ஷியின் திறமை மீது முழு நம்பிக்கை வைத்துள்ள ஓஜா, அவர் சிவப்பு பந்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார் என்றும், இந்த சவாலை அவர் வெற்றிகரமாக எதிர்கொள்வார் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார். துலீப் கோப்பை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குகிறது. இதில் ஈஸ்ட் சோன் அணி, நார்த் ஈஸ்ட் சோன் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
