வாடமங்கலம் ஏரி: துர்நாற்றம் வீசும் மீன்களால் மக்கள் அவதி!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம் ஏரி, தற்போது கடுமையான சுகாதாரச் சீர்கேட்டால் தத்தளிக்கிறது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில், டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் அழுகிய வாடை வீசுகிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏரியில் கட்லா, ரோகு, சப்பாரை, விரால் போன்ற பல்வேறு வகை மீன்கள் வணிக ரீதியாக வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த சில நாட்களாக ஏரிக்கரையோரங்களில் ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதக்கத் தொடங்கியுள்ளன. அழுகி வரும் இந்த மீன்களால், கிராமம் முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி, மக்கள் வீட்டில் நிம்மதியாக உணவு உண்ணக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், செத்து மிதக்கும் மீன்களைக் காகம், பருந்து போன்ற பறவைகள் கொத்திச் சென்று, அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளின் வீட்டின் கூரைகள், மொட்டை மாடிகள் மற்றும் திறந்தவெளி தண்ணீர் தொட்டிகளில் போட்டு விடுகின்றன. இது, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் பேராபத்தை உருவாக்கியுள்ளது. இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்தி, கிராமத்தின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். மீன்வளத்துறை அதிகாரிகள் ஏரியை நேரில் ஆய்வு செய்து, மீன்கள் வெப்பத்தால் இறந்தனவா அல்லது விஷக்கலப்பால் இறந்தனவா என்பதை பரிசோதிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் மீன்வளத்துறையும் மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version