சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர், முன்னாள் முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் (38) திடீர் உடல்நலக்குறைவால் லக்னோவில் இன்று காலமானார். நுரையீரல் பிரச்சனைகள் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நுரையீரலில் ஏற்பட்ட இரத்த உறைவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது திடீர் மறைவு அரசியல் வட்டாரத்திலும் குடும்பத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பிரதீக் யாதவ் உடல்நலம் குன்றி காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று காலை 6:15 மணியளவில், குடும்பத்தினர் அவரை லக்னோவில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய பிரேதப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், பிரதீக் யாதவ் தனது மனைவி அபர்ணா யாதவ் உடனான உறவு குறித்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார். இன்ஸ்டாகிராமில், அவர் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாகவும், அவர் சுயநலவாதி என்றும், குடும்ப உறவுகளைச் சிதைப்பதாகவும் குற்றம் சாட்டினார். எனினும், சில நாட்களிலேயே இருவரும் மீண்டும் இணைந்ததாக ஒரு அறிக்கையும் வெளியானது. 2011 இல் திருமணம் செய்துகொண்ட பிரதீக் மற்றும் அபர்ணா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
முலாயம் சிங் யாதவின் மூத்த மகன் அகிலேஷ் யாதவ் தற்போது சமாஜ்வாதி கட்சியின் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் உள்ளார். அகிலேஷ் யாதவின் ஒன்றுவிட்ட சகோதரரான பிரதீக் யாதவின் இந்த திடீர் மரணம், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.