இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையான யுபிஐ (UPI) தொடர்ந்து பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். யுபிஐ தொடங்கப்பட்டதிலிருந்தே எந்தவிதமான பரிவர்த்தனைக் கட்டணமும் இன்றி செயல்பட்டு வருவதாகவும், இனிவரும் காலங்களிலும் இந்தியர்கள் இந்த சேவையை இலவசமாகவே பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 மீதான விவாதத்தின் போது நிதியமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், 'Taxation and Other Laws Amendment Bill 2026, Payment and Settlement Systems Act 2007 இன் பிரிவு 10A வை திருத்த முன்மொழிகிறது. இந்த திருத்தம் ஒரு சட்டபூர்வமான அதிகாரத்தை வழங்கும் ஏற்பாடு மட்டுமே. இது UPI பயனர்களிடம் எந்தவிதமான வரியையோ அல்லது பரிவர்த்தனை கட்டணத்தையோ உடனடியாக விதிக்காது' என விளக்கினார்.
இந்த திருத்தத்தின் மூலம், எந்தெந்த மின்னணு பணப்பரிவர்த்தனை முறைகளுக்கு கட்டணத்திலிருந்து சட்டபூர்வ பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும் என்பதை அரசு அறிவிப்பு மூலம் குறிப்பிடுவதற்கான அதிகாரத்தை மத்திய அரசு பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (NPCI) தலைமையிலான UPI மற்றும் Services Steering Committee, Merchant Discount Rate (MDR) எனப்படும் MDR கட்டணம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்கும். அவ்வாறு MDR கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டால், அதன் வரம்பு மற்றும் நடைமுறை அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் இந்த குழு முடிவு செய்யும்.
எனவே, தற்போதைய நிலையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான எந்தவொரு MDR கட்டண முறையும் இறுதி செய்யப்படவில்லை என்பதை நிதியமைச்சர் தெளிவுபடுத்தினார். இது லட்சக்கணக்கான இந்தியர்களின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அனுபவத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பாகும்.
யுபிஐ சேவையின் தொடர்ச்சியான இலவச பயன்பாடு, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும், சிறு வணிகங்கள் மற்றும் தனிநபர்களிடையே பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, யுபிஐ சேவையின் மீது பயனர்களிடையே நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்.
