முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது தனக்கு கோபம் இல்லை என்றும், வருத்தம் மட்டுமே இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ஆளுங்கட்சி அமைச்சர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதல்முறையாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்குவது இதுவே முதல்முறை என்றும், இது ஒரு கேடுகெட்ட ஆட்சி என்றும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். எந்தக் கேள்விகளுக்கு பதிலளித்தாலும், ஆளும் தவெக அமைச்சரவையில் உள்ள மூன்று பேர் மட்டுமே பதிலளிப்பதாகவும், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் துறை ரீதியான அமைச்சர்களிடம் பதில் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் உண்மைகளை மறைத்து மடைமாற்றம் செய்யும் வேலையைத்தான் தவெக அமைச்சர்கள் செய்வதாகவும் அவர் விமர்சித்தார்.
ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துவது திமுக பக்கம் வரும் இளம் தலைமுறையினர் தான் என்றும், திமுக-வின் சாதனைகளைப் பார்த்து கழகத்திற்கு வரும் இளைஞர்களையும் குறிவைத்து தவெக அரசு தொடர்ந்து கைது செய்து வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இதற்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது கோபம் இல்லை, வருத்தம் மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்ட அவர், வருத்தம் மட்டுமல்ல, சேகர்பாபு மீதும், இந்த மாவட்டம் மீதும் தனக்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்தார். திமுக அரசின் சாதனைகள் இளம் தலைமுறையினரை சென்றடையவில்லை என்று கூறி நம்மை நாம் சமாதானம் செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். நான்கு மாதங்களுக்குப் பிறகு சென்னை கிழக்குப் பகுதிக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

