தஞ்சையில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை நகைச்சுவையாக பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.வெ.க மகளிர் அணி புகார் அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளில் தஞ்சை காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, உதயநிதிக்கு எதிராக தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், 'என் மீதான இந்த கைது நடவடிக்கையை நான் காமெடியாகவே பார்க்கிறேன். முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஒரு முயற்சியாகவே இந்த அரசு செயல்படுகிறது. பெரிய பிரச்சனைகள் வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது' என தெரிவித்தார்.
மேலும், 'நான் பேசாத ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது. விவசாயிகள் பிரச்சனைகள் போன்ற முக்கிய விஷயங்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காகவே இந்த விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது' என்றும் அவர் கூறினார்.
விசாரணைக்காக கைது செய்யப்பட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். கைது செய்யப்படுவதற்கு தான் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
