வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாக அமைந்துள்ள த.வெ.க. அரசின் 85 நாள் நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிப்பதாக தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகள் பல நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்றும், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், விவசாயிகளுக்கு நேரடி உதவி செய்யும் மத்திய அரசின் அறிவிப்புகள் போல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். நீர் பாசனத்தை மேம்படுத்த எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை என்றும், காவிரி, குண்டாறு போன்ற நதிகளை இணைப்பதன் மூலம் 5000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும், இதை த.வெ.க. அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தி.மு.க.வும், த.வெ.க.வும் பேசி வைத்துதான் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்துள்ளனர் என்றும், இது வெறும் நாடகம் என்றும் அர்ஜுன் சம்பத் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ஒருவர் அப்பாவை காணவில்லை என்கிறார், மற்றொருவர் மனைவியை காணவில்லை என்கிறார், இதுபோன்ற அரசியல் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
த.வெ.க. குறித்து யார் விமர்சித்தாலும் கைது செய்யப்படுவதாக இருந்தால், திராவிட மாடலுக்கும் த.வெ.க. ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லை என்று கூறினார். பிரதமர் மோடியை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் விமர்சித்ததையும், அதையெல்லாம் மோடி மன்னித்துவிட்டதையும் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாடு மக்களுக்கான நல்ல திட்டங்களை நிறைவேற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் கொள்கை சனாதனத்தை ஒழிப்பதுதான் என்றும், த.வெ.க. தற்போது தி.மு.க.வின் கொள்கையில் தான் தொடர்கிறது என்றும் அவர் கூறினார். திராவிட மாடலின் 2.0 தான் தற்போதைய த.வெ.க. ஆட்சி என்றும் குறிப்பிட்டார்.
அ.தி.மு.க., தி.மு.க., த.வெ.க. மூன்றும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்றும், த.வெ.க. ஆட்சி தி.மு.க. அரசின் ஊதுகோலாக செயல்படுகிறது என்றும் விமர்சித்த அர்ஜுன் சம்பத், வருங்காலத்தில் அரசியல் என்பது த.வெ.க. எதிர்ப்பு பா.ஜ.க.வாகத்தான் இருக்கும் என்று கூறினார்.
