தமிழ்நாடு அரசின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். த.வெ.க அரசின் இந்த முதல் நிதிநிலை அறிக்கை, மாநிலத்தின் வளர்ச்சியை மையமாகக் கொண்ட தொலைநோக்கு திட்டங்களை முன்வைப்பதாக அமைந்துள்ளது.
நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது பட்ஜெட் உரையை த.வெ.க கொள்கை தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்து, அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரை நினைவு கூர்ந்தார். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் மக்கள் மனதில் முதலமைச்சர் விஜய் இடம்பிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பல்வேறு சவால்களைக் கடந்து ஜனநாயக முறையில் முதலமைச்சர் விஜய் இந்த அவையில் அமர்ந்திருப்பதாகவும், மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்தவர் அவர் என்றும் மரிய வில்சன் புகழாரம் சூட்டினார்.
த.வெ.க தலைவர் விஜய் தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்து வெறும் 3 மாதங்களில் ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். சொன்னதை மட்டுமல்லாமல், சொல்லாதவற்றையும் இந்த அரசு நிறைவேற்றித் தந்துள்ளது என்றும், உண்மையான சமூக நீதியே இந்த அரசின் கொள்கை என்றும் அவர் வலியுறுத்தினார். த.வெ.கவின் வெற்றி என்பது ஒரு கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் 2031 ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தை 1.31 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவதை இலக்காகக் கொண்டு அரசு செயல்பட்டு வருவதாக மரிய வில்சன் கூறினார். இதற்காக, த.வெ.கவின் 'வெற்றித்தமிழகம்' திட்டத்தை அரசு தீவிரமாக பின்பற்றும் என்றும், இந்த பட்ஜெட் உண்மையான தொலைநோக்கு திட்டத்தை வடிவமைத்துக் காட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பெண் படையில் இருந்து டாஸ்மாக் சீர்திருத்தங்கள் வரை பலவற்றை த.வெ.க அரசு செய்து காட்டியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், இலவச மின்சார யூனிட்டை 200 யூனிட்டாக மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 3 மாதங்களில் த.வெ.க அரசு மக்களுக்காக ஏராளமான திட்டங்களை கொடுத்து சாதனை படைத்துள்ளதாகவும், இந்த தொலைநோக்கு பார்வையை முன்னெடுக்கும் வகையில் 'வெற்றித் தமிழகம்' திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளதாகவும் மரிய வில்சன் கூறினார். 2036 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதே இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை செய்துள்ள த.வெ.க அரசு, தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத வகையில் செயல்பட்டு வருவதாகவும், இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாகவும் மரிய வில்சன் தெரிவித்தார். பொதுப்பணித் துறைகளில் டெண்டர் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய மற்றும் வளர்ந்து வரும் ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அரசின் டெண்டர்கள் ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்து வந்த நிலை மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கட்டிட அனுமதியில் உள்ள பழைய நடைமுறை மாற்றப்பட்டு, அதில் நிலவி வந்த ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மக்கள் வரிப்பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டோம், தொட விடமாட்டோம் என்றும், இதுவரை தொட்டவர்களையும் விடமாட்டோம் என்றும் அவர் உறுதியளித்தார். மாநிலத்தின் நிதி ஆதாரத்தை பெருக்க அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
