2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளராக அருண்குமார் அறிவிக்கப்பட்டிருந்தார். இத்தொகுதியில் தவெக போட்டியிடுவதில் திடீர் சிக்கல் எழுந்தது. அருண்குமார் மற்றும் அவரது மனைவி மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி தேர்தல் ஆணையத்தால் இருவரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால், எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிடும் வாய்ப்பு பறிபோனது.
இந்தச் சூழ்நிலையில், அதே தொகுதியில் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக தவெக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேர்தல் முடிவுகளின் போது, தவெக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெற்றார். இருப்பினும், அதிமுக வேட்பாளரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தவெக வேட்பாளர் அருண்குமார் வேண்டுமென்றே தனது வேட்புமனுவை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதன் மூலம் அதிமுகவுக்கு ஆதரவளித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தவெகவில் சேருவதற்கு முன்பு அவர் அதிமுகவில் உறுப்பினராக இருந்ததால், இந்தக் குற்றச்சாட்டுகள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாயின.
இந்நிலையில், தனது தாய் கழகமான அதிமுகவில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அருண்குமார் இன்று தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வு தவெக தலைவர் விஜய்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
எடப்பாடி தொகுதியில் தவெகவின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விகள் எழுந்த நிலையில், வேட்பாளர் அருண்குமார் மீண்டும் அதிமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தவெகவின் அடுத்தகட்ட செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
