கர்நாடக மாநிலம் துமகூரு நகரில் உள்ள 'விஸ்வாஸ் ஜூவல்லர்ஸ்' நகைக்கடையில், கண்ணாடி அலமாரியை உடைக்காமல் வைர நகைகள் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மர்மமான திருட்டுக்கு ஒரு பெரிய எலி காரணமாக இருந்ததை கண்காணிப்பு கேமரா காட்சிகள் அம்பலப்படுத்தியுள்ளன.
வழக்கம் போல் வியாபாரத்தை தொடங்க வந்த ஊழியர்கள், கண்ணாடி அலமாரியில் இருந்த வைர மோதிரங்கள் மற்றும் தங்கச் சங்கிலிகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடையில் எந்தவித உடைப்போ அல்லது கொள்ளை முயற்சி நடந்ததற்கான தடயமோ இல்லாததால், ஊழியர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. உள்ளூர் ஆசாமிகள் யாரேனும் கைவரிசை காட்டியிருப்பார்களோ என்ற சந்தேகத்தில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க ஊழியர்கள் முயன்றனர்.
ஆனால், நகைக்கடை உரிமையாளர், கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய முடிவு செய்தார். அதிகாலை சுமார் 4 மணி அளவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, உரிமையாளரும் ஊழியர்களும் திகைத்துப் போயினர். ஒரு பெரிய எலி கடையின் மேற்புறத்தில் இருந்து குதித்து, வைர நகைகள் இருந்த கண்ணாடி அலமாரியை நோக்கிச் சென்றது.
அந்த எலி, அலமாரிக்கு அருகில் இருந்த ஒரு சிறிய துவாரத்தின் வழியாக உள்ளே நுழைந்து, மின்னல் வேகத்தில் வைர மோதிரங்கள் மற்றும் தங்கச் சங்கிலிகளைக் கவ்விக்கொண்டு, கேமராவுக்கு 'டாட்டா' காட்டிவிட்டு தப்பிச் சென்றது. நகைகளின் ஜொலிஜொலிப்பை திண்பண்டம் என நினைத்த எலி, அதனை வாயில் கவ்விச் சென்ற காட்சி சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகியிருந்தது.
கொள்ளையன் யார் என்று தெரிந்தவுடன், ஊழியர்கள் எலி நகைகளை இழுத்துச் சென்ற பாதையை கண்டுபிடித்துச் சென்றனர். கடையின் ஒரு மூலையில் இருந்த பெரிய எலி வளை அவர்களுக்கு சிக்கியது. கடப்பாரை மற்றும் மண்வெட்டிகளுடன் அந்த வளைக்குள் தேடியபோது, எலி தனது படுக்கையறையாகப் பயன்படுத்திய அந்த வளைக்குள் 10 வைர மோதிரங்கள் மற்றும் 50 கிராம் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகள் பத்திரமாக மீட்கப்பட்டன.
காவல் நிலையம் வரை செல்லவிருந்த இந்த வழக்கு, ஒரு சிசிடிவி கேமரா காட்சி மூலம் எலியின் வளைக்கே கொண்டு செல்லப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. மொத்த நகைகளும் எவ்வித சேதாரமும் இன்றி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, நகைக்கடை உரிமையாளர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
இது தொடர்பாக பேசிய கடையின் உரிமையாளர், 'இனிமேல் லாக்கரை விட எலி வலையை தான் நாங்கள் ஜாக்கிரதையாகப் பார்க்க வேண்டும். முதலில் நகையைக் காணவில்லை என்று ஊழியர்கள் கூறியபோது நான் நம்பவில்லை. நகை எப்படி திருடு போனது என்பது எங்களுக்கு பெரும் குழப்பமாக இருந்தது. ஒரு ஊழியர் ஒரு அலமாரியில் இருந்த மோதிரம் வேறொரு அலமாரியில் கிடக்கிறது என்றார். ஆனால், அதில் டேக் இல்லை என்றும் கூறினார். இதனையடுத்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை நாங்கள் பார்க்க தொடங்கினோம். அப்போதுதான் இது எலியின் வேலை என தெரிந்தது' எனத் தெரிவித்தார்.
இந்த அசாதாரண சம்பவம், துமகூரு நகைக்கடை உரிமையாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் திருட்டு சம்பவங்களில் எலிகளின் பங்களிப்பும் இருக்கக்கூடும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

