வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை மூடல் மற்றும் ஈரானின் கடற்பகுதி முற்றுகை போன்ற காரணங்களால் ஒப்பந்தம் எட்டுவதில் தடங்கல்கள் நீடித்து வருகின்றன. இந்த சிக்கல்களைக் களைந்து நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னர் தெரிவித்திருந்தார். ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அடங்கிய உடன்பாடு தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை பெருமளவில் நிறைவடைந்துள்ளதாகவும், ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட அம்சங்கள் மற்றும் விவரங்கள் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என அமெரிக்க பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், 'ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இரு தரப்பும் தங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு சரியான முடிவை எட்ட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஈரான் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி கூறுகையில், ஒப்பந்தத்தை எட்டுவதில் இரு தரப்பும் 'மிக அருகிலும், மிக தூரத்திலும்' உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.