வங்காளதேசத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் தோற்றத்தை ஒத்திருக்கும் ஒரு வெள்ளை எருமை மாடு, பக்ரீத் பண்டிகைக்காக பலியிடப்படுவதில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்பட்ட இந்த அல்பினோ ரக எருமை, அதன் தலையில் உள்ள பொன்னிற முடி மற்றும் முக அமைப்பு டிரம்ப்பை நினைவுபடுத்துவதால் இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றது. இதனால், சுமார் 700 கிலோ எடை கொண்ட இந்த எருமைக்கு 'டிரம்ப்' என பெயரிடப்பட்டது.
இந்த அசாதாரண எருமையை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் பண்ணைக்கு வரத் தொடங்கினர். இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த எருமையை குர்பானிக்காக பலியிட முடிவு செய்யப்பட்டபோது, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பொதுமக்களின் அதீத ஆர்வம் கருதி, வங்காளதேச அரசு அதனை காப்பாற்ற முடிவு செய்தது. இதற்காக, எருமையை பலியிடாமல் அதன் உரிமையாளருக்கு பணத்தை திருப்பித் தரவும், எருமையை அரசாங்கத்தின் பராமரிப்பில் டாக்காவில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு மாற்றவும் உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் எருமையின் உரிமையாளர் மொனிருஸ் ஜமானுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அந்த வெள்ளை எருமை பண்ணையிலிருந்து தலைநகர் டாக்காவில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, இந்த அரிய வகை எருமை இனி அரசாங்கத்தின் கண்காணிப்பில் பராமரிக்கப்படும்.
இது குறித்து உரிமையாளர் மொனிருஸ் ஜமான் கூறுகையில், 'அல்பினோ ரக வெள்ளை எருமையை அரசு பாதுகாத்து வளர்க்க முடிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனவே, நாங்கள் அதனை ஒப்படைத்துவிட்டோம். அரசு எனக்கு இழப்பீடாக பணத்தை வழங்கும் அல்லது வேறொரு எருமை, பசு அல்லது காளையை அளிக்கும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்' என்று தெரிவித்தார்.