தி.நகர் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் என்.ஆனந்த் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினருமான என். ஆனந்த், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஒரு முக்கிய கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில், தியாகராய நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவல்துறை, மின்சாரத்துறை, சென்னை மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பிற அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முக்கிய நோக்கம், தியாகராய நகர் தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அங்கு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிப்பதாகும். அமைச்சர் என். ஆனந்த், அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளையும் வழங்கினார். பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தொகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும், இரவு நேரங்களிலும் வெளிச்சம் தரும் வகையில் தெரு விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், தியாகராய நகர் பகுதி இருள் இல்லாத பகுதியாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பெண்களின் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும், கஞ்சா போன்ற போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும், டாஸ்மாக் கடைகள் சரியான நேரத்தில் மூடப்படுவதை உறுதி செய்வது குறித்தும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து போக்குவரத்தைச் சீரமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். மக்களின் அத்தியாவசியத் தேவைகளான மின்சாரம், தண்ணீர், மருத்துவம் போன்றவற்றை எந்தப் பிரச்சனையும் இன்றி மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும், தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் காவல்துறை துணை ஆணையாளர் V.R. சீனிவாசன், சிவில் சப்ளை உதவி ஆணையாளர் அபிநயா, வட்டாட்சியர் D. வாணி, மின்துறை செயற்பொறியாளர் ஏ. வெங்கடேசன், பெருநகர சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் எம். கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version