செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், விளையாட்டு விடுதி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், விளையாட்டுத் துறை வாயிலாக மாணவர்களை போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டியது இன்றைய காலத்தின் அவசியமான தேவையாகும் என்று குறிப்பிட்டார். தமிழகம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் தொடர்ந்து சிறப்பான முன்னேற்றங்களைக் கண்டு வந்தாலும், சர்வதேச அளவிலான ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களைப் பெறுவதில் நாம் இன்னும் பின்தங்கியுள்ளோம். இதற்கு நமது விளையாட்டுப் பயிற்சி முறைகள் சுமார் 30 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதே முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனியை ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கண்டறிந்து வெளிக்கொணர்ந்தது போல, தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் மறைந்திருக்கும் விளையாட்டுத் திறமையாளர்களை நாம் தேடிக் கண்டறிய வேண்டும். தமிழகத்தை விளையாட்டின் தலைநகரமாக மாற்றும் நோக்கத்துடன், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களை ஒருங்கிணைத்து சிறப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுவாக உடற்கல்வி வகுப்பு என்றாலே, வகுப்பில் உள்ள 100 மாணவர்களில் 99 பேர் உற்சாகத்துடன் எழுந்து நிற்பார்கள். எனவே, நாள்தோறும் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் மாணவர்களை விளையாட வைப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். மாணவர்கள் நன்றாக விளையாடும்போது, அவர்களின் கல்வித் திறனும் தானாகவே மேம்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், ஏழை மாணவர்களின் நலனுக்காகவும் தவெக-வின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்தார். டெல்லியில் உள்ள மாணவர்கள் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக எழுப்பும் குரலுக்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
தங்கை அனிதாவை இழந்து தவிக்கும் எண்ணற்ற சகோதரர்களின் துயரம் தீர, நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிக உறுதியாக இருக்கிறோம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களால் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து நீட் பயிற்சி மையங்களில் சேர முடியாது என்பதே நிதர்சனம்.
மத்திய அரசின் இந்த தவறான கொள்கைக்கு எதிராக மாணவர்களின் குரலாக நின்று, பாராளுமன்றத்தில் நீட் தேர்வு திரும்பப் பெறப்படும் வரை, நமது மாநில முதல்வரின் குரல் இந்தியாவிலேயே முதன்மையான உரத்த குரலாக எதிரொலிக்கும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது உரையில் குறிப்பிட்டார்.

