தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் நாளை (28.07.2026) நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், 'நீட்' மற்றும் 'நெக்ஸ்ட்' தேர்வுகளில் இருந்து மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ மற்றும் பல்மருத்துவ இடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள 100 விழுக்காடு மருத்துவ இடங்களுக்கான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், ஏழை மாணவர்களின் கல்வி, விடுதி, உணவு கட்டணங்களை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்றும், வட்டியில்லா கல்விக் கடன்களை எந்த நிபந்தனையுமின்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ – பல்மருத்துவ இடங்களில் உள் ஒதுக்கீட்டை வழங்க NMC Act மற்றும் NDC Act-ல் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களிலும் கம்யூனிட்டி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மாப் அப் மற்றும் ஸ்ட்ரே கவுன்சிலிங்கை ரத்து செய்ய வேண்டும், கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தை கடுமையாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும், கட்டாய நன்கொடை மற்றும் கூடுதல் கட்டணங்களை வசூல் செய்யும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களை எந்த இழப்பீடும் இன்றி அரசுடமையாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மருத்துவக்கல்வி மற்றும் அரசு மருத்துவமனைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டும், மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கி, பொது தனியார் பங்களிப்பு முறையில் (PPP model) மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி, விடுதி மற்றும் உணவுக் கட்டணத்திற்கான நிதியை, இன்றைய விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு தமிழ்நாடு அரசு உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், மாணவர்கள் நல வாரியம், பாதுகாப்பு குழு, மாணவர் மன்றங்களை அமைத்திட வேண்டும். ICC உட்புகார் குழுக்களையும் (விஷாகா கமிட்டிகளை) அமைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கு மேல் பணி வழங்கக் கூடாது என்றும், அவர்களின் பயிற்சி கால உதவி ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரப்பட்டது. சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக ஒரு கல்லூரி பேருந்தை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

