முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் கோயில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு இணங்க, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கடைகள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்த மர்மங்கள் நீடிப்பதாகவும், இது தொடர்பாக தவெக அரசு ஒரு வெள்ளையறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தனது அறிக்கையில், "நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், மூடப்பட்ட கடைகளின் முகவரிகள் மற்றும் அது தொடர்பான முக்கிய தகவல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் இதுவரை வெளியிடப்படவில்லை. மூடப்பட்டதாகக் கூறப்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்குக்கூட RTI-யிடம் இருந்து பதில் இல்லை. மேலும், விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கான பதிலையும் தற்போதைய அரசு மென்று முழுங்குகிறது" என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
"மொத்தத்தில், மூடப்பட்டதாகக் கூறப்படும் 717 டாஸ்மாக் கடைகள் பற்றி எது கேட்டாலும், 'அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும்' என்ற ஒரே பதில் மட்டுமே RTI-யிடம் இருந்து கிடைக்கிறது. அந்தந்த மாவட்ட மேலாளரிடம் தரவுகள் இருக்குமாயின், அவற்றைச் சேகரித்து RTI மூலம் எளிதாக மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"தவெக ஆட்சியில் இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்களையும், முகவரிகளையும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் குறித்தும் ஒரு வெள்ளையறிக்கையை வெளியிட ஆளும் அரசு எதற்குத் தயங்குகிறது?" என்று நயினார் நாகேந்திரன் மேலும் வினவியுள்ளார்.
"உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற நோக்கில் தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா?" போன்ற மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும், "வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது" என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தனக்குக் கிடைத்த பதில்களின் விவரங்களையும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் இணைத்துள்ளார். இவரைப் போன்றே பலரும் இந்த ஆவணத்தைக் குறிப்பிட்டு, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் தொடர்பாக முழுமையான விவரங்களை வெளியிடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

