தமிழக முதல்வர் விஜய் இன்று கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்

தமிழக முதல்வர் விஜய் இன்று கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றிருந்த முதல்வர், அங்கிருந்து நேரடியாக மங்களூரு விமான நிலையம் வந்து, சாலை மார்க்கமாக கொல்லூர் செல்ல உள்ளார். பகல் 12.30 மணியளவில் மங்களூரு வந்து, பின்னர் சாலை வழியாக பகல் 3 மணியளவில் கொல்லூர் திருத்தலத்தை அடைந்து அம்மனை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கொல்லூர் மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தராக இருந்தார். அவர் பல முக்கிய அரசியல் முடிவுகளுக்கு முன்பும் பின்பும் இக்கோயிலுக்கு வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1984ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, அவருக்காக பலர் கொல்லூர் சென்று வேண்டிக்கொண்டனர். சிகிச்சை முடிந்து திரும்பிய எம்.ஜி.ஆர்., தனது உடல்நலம் தேறியதற்கும், தேர்தலில் வெற்றி பெற்றதற்கும் மூகாம்பிகை அம்மனே காரணம் எனக் கருதி, ஒன்றரை கிலோ எடையுள்ள தங்க வாளை காணிக்கையாக செலுத்தினார். இந்த வாள் இன்றும் அம்மனின் கருவறையில் பாதுகாக்கப்பட்டு, விசேஷ நாட்களில் அலங்காரமாக சாத்தப்படுகிறது.

முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு, கொல்லூர் பகுதியில் கர்நாடக மாநில காவல் துறை மற்றும் உடுப்பி மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசனத்தின் போது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமலும், முதல்வருக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் விரிவான பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன.

கோயில் நிர்வாகம் சார்பில் முதல்வருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கவும், அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் சண்டி ஹோமம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் அண்டை மாநில ஆன்மீக பயணம் என்பதால், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version