முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் தற்போதைய திமுக அரசின் திட்டங்களுக்கு அடுத்தடுத்து பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தற்போது 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தில் இருந்த 'விடியல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, 'மகளிர் பயணம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 'நான் முதல்வன்' திட்டம் 'திறன் தமிழ்நாடு' என்றும், 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டம் 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என்றும் பெயர் மாற்ற பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகள் பசியின்றி கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஊட்டச்சத்து திட்டங்கள், வரலாற்று ரீதியாக பல்வேறு தலைவர்களால் மேம்படுத்தப்பட்டு இந்தியாவிற்கே முன்னோடி மாதிரியாக திகழ்கின்றன. வறுமையின் காரணமாக எந்தக் குழந்தையும் கல்வி கற்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் முதன்முதலில் 'மதிய உணவு திட்டத்தை' அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் கிராமப்புற மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது.
காமராஜர் தொடங்கி வைத்த இந்த திட்டத்தை, அவரைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் ஆட்சிக் காலத்தில் மேலும் மேம்படுத்தி திறம்படச் செயல்படுத்தினர். எம்.ஜி.ஆர் இத்திட்டத்தை 'சத்துணவுத் திட்டமாக' விரிவுபடுத்தி, லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவை வழங்கினார். கலைஞர் கருணாநிதி சத்துணவுடன் வாரத்திற்கு முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி புரட்சி செய்தார். ஜெயலலிதா, மாணவர்களுக்கு கலவை சாதம் மற்றும் சுவையான ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி திட்டத்தை மேலும் வலுப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பொறுப்பேற்ற அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரலாற்று சிறப்புமிக்க மற்றொரு திட்டத்தை கொண்டுவந்தார். குழந்தைகள் காலை உணவைத் தவிர்க்காமல் புத்துணர்ச்சியோடு பள்ளிக்கு வர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, 2022-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி, 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை' முறைப்படி அறிமுகப்படுத்தினார். அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குச் சூடான, சத்தான காலை உணவு வழங்கும் இத்திட்டம், மக்கள் மத்தியிலும் கல்வியாளர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்றது.
பின்னர், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 17.55 லட்சம் மாணவ, மாணவியர் இத்திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போதுள்ள அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் சுமார் 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 20.59 லட்சம் குழந்தைகள். 6 முதல் 8-ம் வகுப்பு வரை இத்திட்டம் விரிவாக்கத்திற்குப் பிறகு, மாநிலம் முழுவதும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் வரை பயன்பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'முதலமைச்சர் காலை உணவு திட்டம்' எனும் பெயரை மாற்றி, 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
