தமிழக சட்டமன்றத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான தனி தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்தார். தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்றும், மாநிலங்களவை உறுப்பினர்களின் விகிதாசார பிரதிநிதித்துவம் தற்போதைய அளவிலேயே நீடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த தீர்மானம் ஒரு அரசியல் கட்சியின் தனிப்பட்ட கோரிக்கை அல்ல என்றும், மாறாக தமிழ்நாட்டின் உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் ஒரு முயற்சி என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். எனவே, அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான முதலமைச்சரின் தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் தனது கருத்தை பதிவு செய்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டதை களங்கப்படுத்த வேண்டாம் என்றும், இவ்வளவு அவசரமாக இந்த தீர்மானத்தை கொண்டு வருவதை பா.ஜ.க. ஏற்கவில்லை என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற கட்டிடத்தை அடிக்கடி இடித்து கட்ட முடியாது என்பதால் தான், அதிக இருக்கைகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கினார்.
மேலும், தொகுதி மறுவரையறை என்பது பரிசீலனையில் உள்ள ஒரு விஷயம் என்றும், மாற்றங்கள் நல்லது என்றும் போஜராஜன் தெரிவித்தார். இந்த மாற்றங்களால்தான் நீங்கள் (அமைச்சர்கள்) பதவிகளுக்கு வந்தீர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் அதிக இருக்கைகளுடன் கட்டிடம் கட்டப்பட்டதை விமர்சனமாக முன்வைக்கிறார்கள், ஆனால் அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், வருங்கால சந்ததியினரை மனதில் வைத்துதான் அது கட்டப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானத்தை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இவ்வளவு அவசரப்பட்டு கொண்டு வரும் இந்த தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த விவாதம் சட்டமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

