திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் உற்சவர் கோவிந்தராஜர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி, கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
விழாவின் நான்காம் நாளான இன்று காலை, கற்பக விருட்ச வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார். இந்த வாகன சேவையின் போது மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாடினர். கலைஞர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். சிலர் கடவுள் வேடமணிந்து வந்து பக்தர்களை பரவசப்படுத்தினர். மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் 'கோவிந்தா' கோஷமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
இன்று காலை வேத மந்திரங்கள் முழங்க, பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இன்று மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சர்வபூபால வாகன சேவை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிகளில் தேவஸ்தான அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
