வாகன ஓட்டிகளே உஷார்! திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் இனி வாகனங்கள் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அதிரடியாக அறிவித்துள்ளார். வண்ணாரப்பேட்டை ரவுண்டானா பகுதியில் சமீபத்தில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், வண்ணாரப்பேட்டை பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமீபத்தில் வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகே தனியார் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர். இதுபோன்ற துயர சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். இதற்காக மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டோம்" என்று தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் உள்ள வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற துறைசார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டப் பணிகளைப் பொறுத்தவரை, ஒரு மேன்ஹோல் முதல் அடுத்த மேன்ஹோல் வரையிலான பணிகளை முழுமையாக நிறைவு செய்து, சாலையை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்த பின்னரே அடுத்த இடத்தில் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து செயல்பட்டு, தோண்டப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். மீதமுள்ள சாலைப் பணிகளை இன்னும் ஒரு வார காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தனியார் பேருந்துகள் வழித்தட விதிமீறல், நேர விதிமீறல் மற்றும் அதிவேக இயக்கம் தொடர்பான புகார்கள் தொடர்ந்து பெறப்பட்டு வருவதாகவும், அவை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வண்ணாரப்பேட்டை விபத்துக்கு முக்கிய காரணம், சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதே ஆகும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தனியார் பேருந்தின் இயக்க உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்துத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நகர எல்லைக்குள் வாகனங்களுக்கான வேக வரம்பு மணிக்கு 30 கிலோ மீட்டர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தாலும், போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக இயக்கும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

