திருநெல்வேலி போக்குவரத்து மண்டலத்தில் பேருந்து சேவைகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மண்டலம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இப்பகுதிகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகர, நகர மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
தற்போது, மேலிடத்தின் உத்தரவின் பேரில், குறிப்பாக இரவு நேரங்களில் மகளிர் இலவச பேருந்து சேவைகள் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், இரவு 10 மணிக்கு மேல் மகளிர் பேருந்துகளை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்பட்ட பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதே நிலை கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் நீடிப்பதாக கூறப்படுகிறது.
வருவாயைக் காரணம் காட்டி மற்ற பேருந்து சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் தற்போது 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. 40 முதல் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தால் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் பேருந்து சேவை குறைப்பால், பேருந்துகளை நம்பி அன்றாடம் பயணம் செய்யும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்புவோருக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு பேருந்து சேவைகளில் மாற்றம் வரும் என எதிர்பார்த்த மக்களுக்கு, தற்போதைய நிலை ஏமாற்றத்தை அளிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். அடிப்படைத் தேவைகளான போக்குவரத்து சேவைகள் குறைக்கப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால், தனியார் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது பயணச் செலவை அதிகரிப்பதோடு, சாலைகளில் நெரிசலையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
திருநெல்வேலி மண்டலத்தில் பேருந்து சேவைகளை மீண்டும் அதிகரிக்கவும், இரவு நேரங்களில் பொதுமக்களின் சிரமத்தைப் போக்கவும் அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

