முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் நலன் கருதி தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள இக்கோவில், 2000 முதல் 3000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் இக்கோவில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வந்து முருகனை தரிசனம் செய்கின்றனர். வார இறுதி நாட்கள், செவ்வாய், கிருத்திகை, சஷ்டி போன்ற சிறப்பு நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
மேலும், ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் கடற்கரையில் தங்கி, அதிகாலையில் முருகனை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் கோவில் நிர்வாகம் கட்டண தரிசனத்திற்கு மாலை 6.30 மணி வரையும், பொது தரிசனத்திற்கு இரவு 7 மணி வரையும் மட்டுமே அனுமதி என அறிவித்தது. இந்த அறிவிப்பால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
பக்தர்களின் இந்த எதிர்ப்பையும், கோரிக்கைகளையும் பரிசீலித்த கோவில் நிர்வாகம், பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பழைய நடைமுறையையே தொடர முடிவு செய்துள்ளது. அதன்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும்.
முக்கியமாக, இனி பக்தர்கள் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட நேரம், வெளியூர்களில் இருந்து வந்து தரிசனம் செய்ய இயலாத பக்தர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
