தவெக இணைப்பு விழா: தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் உறுதிமொழி

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) மாற்றுக்கட்சியினர் இணைந்த பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தவெக அமைச்சர் என்.ஆனந்த், கட்சிக்கு புதிதாக இணைந்துள்ள தொண்டர்களை அன்புடன் வரவேற்று, பல உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வந்தவர்களை அரவணைத்துப் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், 'அன்று எம்.ஜி.ஆர், இன்று நமது முதலமைச்சர் விஜய். அவர்களின் பெயர்கள் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் மக்கள் நலனுக்கான பாதை ஒன்றுதான். எனவே, இங்கு வந்துவிட்டோமே என யாரும் கலங்க வேண்டாம். உங்களை நாங்கள் மிகவும் பத்திரமாகவும் கண்ணியத்துடனும் பார்த்துக் கொள்வோம். இதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்' என்று உறுதியளித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றியை நினைவு கூர்ந்த அவர், 'இங்கு வந்திருக்கும் உங்களின் முகங்களையும், நீங்கள் தவெக கட்சித் துண்டை அணிந்திருப்பதையும் பார்க்கும்போது, கடந்த தேர்தலில் நீங்கள் 'விசில்' சின்னத்திற்குத்தான் வாக்களித்திருப்பீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. மக்கள் எனக்காக அல்ல, நமது மக்கள் தலைவர் தளபதிக்காகத்தான் ஒட்டுமொத்தமாக வாக்களித்தார்கள். தமிழகத்தில் டெபாசிட் இழக்காத ஒரே கட்சி தவெக மட்டும்தான்' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தவெக-வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வியூகங்கள் குறித்தும் அமைச்சர் ஆனந்த் பேசினார். முதலமைச்சர் விஜய் விரைவில் கரூருக்கு அரசு மற்றும் கட்சி ரீதியான வருகையைத் தரவுள்ளார் என்றும், புதுக்கோட்டையிலும் கரூரிலும் பலம் வாய்ந்த தலைவர்கள் தவெக-வில் இணைந்து கட்சியை வலுப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இனிவரும் உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழகம் முழுவதும் தவெக கவுன்சிலர்கள் மற்றும் சேர்மேன்கள் மட்டுமே பதவியில் அமர வேண்டும் என்பதே தவெக அரசின் குறிக்கோள் என்றும், மக்களுக்கு நேர்மையாகச் சேவை செய்வதே முதல் மற்றும் இறுதி நோக்கம் என்றும் அவர் கூறினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version