சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில், தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினரான 'ஜான் பிரிட்டோ' செயல்பட்டதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ தகவலின்படி இந்த உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் ஆதரவுடனேயே இத்தகைய பெரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு செயல்படுவது மாநிலத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக திமுக தனது எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளது. 'தூய சக்தி' என வாக்குறுதி அளித்தவர்கள், இன்று இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் 'போதை சக்தியாக' மாறியுள்ளனரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு குறித்த ஆதாரங்கள் வெளிப்படையாக இருந்தும், ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து ஊடகங்கள் மௌனம் சாதிப்பதாக திமுக ஐடி விங் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், தேர்தலின் போது தவெக-வை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த சமூக வலைத்தள 'இன்ஃப்ளூயன்சர்கள்', மாநிலம் போதை மாஃபியா பிடியில் சிக்கியிருக்கும்போது எங்கே சென்றார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதலீடா என்றும் திமுக சந்தேகம் எழுப்பியுள்ளது. முதலமைச்சர் விஜய் அவர்கள் உடனடியாக பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.