திருவாரூரில் 365 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை கண்காணிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புகையிலை பொருட்கள் கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருவாரூர் அருகே காட்டூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். காரை ஓட்டி வந்த தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அஷ்ரப் அலி (60) மீது ஏற்கனவே 2025-ம் ஆண்டு முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் குட்கா கடத்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

மேலும், மற்றொரு காரில் 365 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்த காரையும் போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த 365 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரகுமார் (24), மங்கனராம் (20) மற்றும் அஷ்ரப் அலி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 கார்கள், 3 செல்போன்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version