திருவள்ளூர் அம்மோனியா கசிவு: 16 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை விளக்கம்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இதுவரை மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் மொத்தம் 83 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 41 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 25 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 26 பேர் சென்னை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவர் வென்டிலேட்டர் உதவியுடனும், 9 பேர் ஆக்சிஜன் ஆதரவுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 16 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 21 முதல் ஜூன் 27 பிற்பகல் 3 மணி வரை மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் ஆவர். மேலும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த 12 பேரின் உடல்கள் விமானம் மூலம் ஒடிசாவிற்கும், 2 பேரின் உடல்கள் அசாமிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 2 பேரின் உடல்களும் சட்ட நடைமுறைகள் முடிந்தவுடன் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version