விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு தமிழக அரசியல் சூழல் குறித்து பேசியுள்ளார். "இன்றைக்கு தமிழக அரசியல் சூழல் தலைகீழாக மாறியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்முறையாக அமைச்சரவையில் இடம்பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது. தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. போன்ற கட்சிகளில் உள்ள தலித் ஒருவர் அமைச்சர் ஆவதற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள தலித் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்தார். எந்த பின்புலமும் இல்லாமல், சூது, சூழ்ச்சி நிறைந்த அரசியலில் பல அவமானங்களைச் சகித்துக்கொண்டு, எதிர்நீச்சல் அடித்து இந்த இடத்தை எட்டியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
வேறு இயக்கமாக இருந்திருந்தால் இதை ஒரு பெரிய சாதனையாகக் கொண்டாடியிருப்பார்கள். ஆனால், இப்போதும் கூட நாம் புறக்கணிக்கப்படுகிறோம், குறிவைத்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறோம் என்ற நிலைதான் இருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு அரசியலை வீரியமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. 2 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்கள், மாநில கட்சி அங்கீகாரம், ஆட்சி அதிகாரப் பகிர்வு ஆகிய தகுதிகளை நாம் பெற்றுள்ளோம்.
தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதும் சரி, தற்போது த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தபோதும் சரி, நம்மை இழிவாக விமர்சிப்பவர்கள் விமர்சித்து வருகின்றனர். இன்றைய தமிழக அரசியல் சூழல் தலைகீழாக மாறியிருந்தாலும், நாம் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக களமாடி வருகிறோம். எனவே, இதை கருத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.