தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் உள்ள கனரா வங்கியில் நகைக்கடன் பெயரில் சுமார் 11.5 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக வங்கி மேலாளர் கார்த்திக் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், காவல்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது.
ஓடைப்பட்டி கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்த கார்த்திக், கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் பெயர்களைப் பயன்படுத்தி, போலியான ஆவணங்களைத் தயாரித்து, அதன் மூலம் நகைக் கடன் கணக்குகளைத் தொடங்கி, பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார். வங்கியின் நகை மதிப்பீட்டாளர் மற்றும் கிளார்க் ஆகியோரின் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி இந்த மோசடி சம்பவங்களை அவர் அரங்கேற்றியுள்ளார்.
குறிப்பாக, 113 பெண்களின் பெயரில் போலியான ஆவணங்களை உருவாக்கி, நகைக் கடன் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலும் பல புகார்கள் எழுந்த நிலையில், கார்த்திக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கூழையனூர் பகுதிக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவர் இதே பாணியில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகை கடன் மோசடியில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், கூழையனூர் வங்கி கிளையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது, நகைக்கடன் பெயரில் பணம் வழங்கப்பட்டதும், ஆனால் அதற்கு ஈடாக எந்த நகையும் வங்கியில் இல்லாததும் கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இது குறித்து வங்கி மேலாளர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ஓடைப்பட்டி மற்றும் கூழையனூர் ஆகிய இரு கிளைகளிலும் மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் பெயர்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த விசாரணையின்போது, வங்கி மேலாளர் கார்த்திக் திடீரென தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து, வங்கி அதிகாரிகள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து விரிவான புகார் அளித்துள்ளனர். பயனாளிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வங்கி மேலாளர் நடத்திய இந்த பிரம்மாண்ட மோசடி சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக் இதுவரை சுமார் 11.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடி சம்பவம் தொடர்பாக வங்கி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள மேலாளரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

