மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் உள்ள வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்கும் 'முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம்' பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதில் உள்ள சிரமங்களைப் போக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
தற்போது விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, முந்தைய அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு உதாரணமாக, 'மகளிர் விடியல் பயணம்' திட்டம் 'மகளிர் பயணம்' என்றும், 'முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்' 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என்றும், 'நான் முதல்வன்' திட்டம் 'திறன் தமிழ்நாடு' என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த வரிசையில், 'முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம்' என்ற பெயரும் தற்போது அரசு அறிவிப்புகளில் இடம்பெறாமல் போயுள்ளது. அதற்குப் பதிலாக, 'பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்' என்ற பொதுவான குறிப்புடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, ஆகஸ்ட் மாதத்திற்கான பொது விநியோகப் பொருட்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என்றும், தகுதியுள்ள பயனாளிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் பெயர் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் அரசு அறிவிப்புகளில் நீக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், முந்தைய அரசின் திட்டங்களின் அரசியல் அடையாளங்களை நீக்கும் நோக்கில்தான் இந்தப் பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருப்பினும், திட்டத்தின் சேவை தொடர்ந்து செயல்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஆகஸ்ட் 2026 மாதத்திற்கு 04.08.2026 மற்றும் 05.08.2026 தேதிகளில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

