மக்களவையில் ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கனிம வளங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா- 2026, அரசியலமைப்பு உறுதி செய்யும் நிதிக் கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த மசோதா மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதாகவும், வருவாய் ஈட்டும் அதிகாரத்தைப் பறிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஒரு மாநிலம் தனது கனிம வளங்கள் மூலம் எந்தவிதமான வரி வருவாயையும் ஈட்ட முடியாத வகையில் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, பட்டியல் II-ன் 50வது பிரிவின் கீழ், ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ராயல்டியிலிருந்து தனித்து, கனிம வளங்கள் மற்றும் கனிமம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு எனத் தெளிவாக உறுதி செய்த தீர்ப்பை இந்த மசோதா மறுப்பதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாடு சுமார் ரூ.3,200 கோடி வருவாயை இழக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். இந்த வருவாய் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டியதாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களின் இயற்கை வளங்களை மாநிலங்களே நிர்வகித்து, அதிலிருந்து கிடைக்கும் வருவாயை அந்தந்த மாநிலங்களே பயன்படுத்தும் உரிமையைப் பறித்து, அதிகாரத்தை ஒன்றியத்தில் குவிப்பது கூட்டாட்சியின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
'சீர்திருத்தம்' என்ற பெயரில் மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், தமிழ்நாட்டின் உரிமையையும், வருவாய் ஆதாரத்தையும் பாதிக்கும் இந்த மசோதாவை எதிர்த்து, மாநிலங்களின் நிதி சுயாட்சி மேலும் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் தங்கம் தென்னரசு தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களின் நிதி அதிகாரத்தைப் பறிக்கும் இந்த மசோதா, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், இது மாநிலங்களின் வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, மாநிலங்களின் நிதி உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரைவில் முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
