முதலமைச்சர் விஜய் தலைமையிலான வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களின் கீழ், தமிழ்நாடு அரசு 'தாய் மாமன் தங்க மோதிரம்' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22 முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்க்கும் தங்க மோதிரம் கௌரவமாக வழங்கப்படும்.
இந்த மகத்தான திட்டத்திற்காக, ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் ஜூலை 14, 2026 அன்று ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. மொத்தம் 11 நிறுவனங்கள் TN Tenders Portal மூலம் பங்கேற்று தங்கள் விலைப்புள்ளிகளை சமர்ப்பித்தன.
ஒப்பந்தப் புள்ளிகள் பரிசீலனையில், 'ஜாய் ஆலுக்காஸ்' நிறுவனம் ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து, BIS தரமுத்திரை உள்ளிட்ட அனைத்து கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து வெறும் 0.01 ரூபாய் என மிகக் குறைந்த விலைப்புள்ளியை அளித்து அனைவரையும் கவர்ந்தது.
தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளிச் சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி, குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்தின் விலையை மற்ற 10 நிறுவனங்களுடன் ஒப்பிட்டு இசைவு தெரிவிக்கக் கோரப்பட்டது. இதில் 'கல்யாண் ஜுவல்லர்ஸ்' நிறுவனம் மட்டுமே இந்த விலைப்புள்ளிக்கு இசைவு தெரிவித்தது.
இதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஜூன் மாதம் முதல் நான்கு மாதங்களுக்குத் தேவையான 1,28,499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்க, குறைந்த விலைப்புள்ளி அளித்த 'ஜாய் ஆலுக்காஸ்' நிறுவனத்திற்கும், இசைவளித்த 'கல்யாண் ஜுவல்லர்ஸ்' நிறுவனத்திற்கும் 70:30 என்ற விகிதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம், தமிழ்நாடு அரசின் சுகாதார சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் செயல்படுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சியையும் முக்கியத்துவத்தையும் கொண்டாடும் வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
