தாய்லாந்து இளவரசி பஜ்ரகிட்டியாபா உயிரிழந்தார். மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் மற்றும் அவரது முதல் மனைவி இளவரசி சோம்சாவலிக்கு பிறந்த முதல் குழந்தையான இவர், மறைந்த மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் மற்றும் அரசியார் சிரிகிட் ஆகியோரின் முதல் பேரக்குழந்தை என்ற பெருமையையும் பெற்றவர்.
கடந்த 2022 டிசம்பர் மாதம், நகோன் ரட்சசிமா மாகாணத்தில் ராணுவப் போட்டிகளுக்காக தனது நாய்களுக்கு பயிற்சி அளிக்கும்போது இளவரசிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் கோமா நிலைக்குச் சென்றார். அரண்மனையில் அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
மே 21 அன்று, பெருங்குடல் அழற்சியால் வயிற்றில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததாக அரண்மனை அறிக்கை வெளியிட்டது. இது குறைந்த ரத்த அழுத்தம், சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் அசாதாரண ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது. அவரது நுரையீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளுக்கு இயந்திரங்கள் மூலம் ஆதரவு வழங்கப்பட்டது.
நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ரத்த அழுத்தத்தைத் தூண்டும் மருந்துகள் அளிக்கப்பட்ட போதிலும், வயிற்றுத் தொற்றால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. பாங்காக் சுலாலோங்கோர்ன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளவரசி காலமானதை அரசு உறுதி செய்துள்ளது. பல்வேறு தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.